யா/மேலைப் புலோலி சைவ பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியம்
வருடாந்த அறிக்கை 2012
முடிக்கொற்றாவற்றைப் பிள்ளையார் திருவருள் முன்னிற்க, மேலைப் புலோலி சைவ பிரகாச வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்தின் 2011 ஆம் வருடத்திற்கான ஆண்டறிக்iகையை சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
 |
| இணைச் செயலாளர் எஸ்.கே. சண்முகசுந்தரம் |
முதற்கண் எங்கள் அழைப்பை ஏற்று, இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு அதிதியும், பாடசாலை முன்னாள் அதிபருமான திரு.மு.கனகலிங்கம் அவர்களுக்கும், இந் நிகழ்வைச் சிறப்பிக்க வந்துள்ள பழைய மாணவ, மாணவிகள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் ஒன்றியத்தின் சார்பில் வணக்கத்தைத் தெரிவிப்பதுடன், வருக வருகவென அகமகிழ்வுடன் வரவேற்கின்றோம்.
இத் தருணத்தில் கடந்த ஐந்து வருடங்களாக எமது வருடாந்தக் கூட்டங்கள் உட்பட நிருவாகக் கூட்டங்கள் என்பவற்றை சிறப்புற நடாத்துவதற்கு இக் கல்லூரியின் இடவசதியை மனமுவந்தளித்த, அளிக்கின்ற கல்லூரி முன்னாள், மற்றும் தற்போதைய அதிபர்களுக்கும் ஒன்றியத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதுடன், தொடர்ந்து அவர்களது ஆதரவையும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம்.
மேலும் கடந்த காலங்களில் எமது நடவடிக்கைகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து, ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளையும் உரிய நேரத்தில் அளித்த எமது முன்னாள் போஷகர் அமரர் சி.பாலச்சந்திரன் அவர்களையும் இத் தருணத்தில் நினைவுகூருகிறோம்.
 |
| அமரர் சிற்றம்பலம் பாலச்சந்திரன் |
பாடசாலையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கு அங்கத்தவர்களாகிய உங்களது ஆர்வம், ஒத்துழைப்பு, முக்கியமாக பொருளுதவி. ஆலோசனைகள் மிக மிக முக்கியமானவை. கடந்த வருடங்களைப் போலவே இப் பங்களிப்புகளை தொடர்ந்தும் சிறப்பாக வழங்குவீர்களென்ற திடமான நம்பிக்கை எமக்குண்டு.
சமர்ப்பிக்கப்படும் இந்த ஐந்தாவது வருடாந்த அறிக்கையானது ஒன்றியத்தின் 2011ஆம் ஆண்டின் முழுக் காலப் பகுதிக்குமான செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.
இவ் வருடத்திய செயற்குழுவானது போஷகர் அமரர் சி. பாலச்சந்திரன், தலைவர் டொக்டர் எம்.கே. இரகுநாதன், சிரேஷ்ட உப தலைவர் டொக்டர் எம்.கே. முருகானந்தன், மற்றும் இணைச் செயலாளர்கள் இருவர், பொருளாளர், உப பொருளாளர், கணக்காய்வாளர் உட்பட செயற்குழு அங்கத்தவர்கள் 12 பேரையும், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் 12 பேரையும் கொண்டு பெரிய அளவிலான உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது. இது எமது செயற்பாடுகளைத் தரமாகவும், திருப்திகரமானதாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு உதவியாக அமைந்திருந்தது. அநேகர் துறைசார் நிபுணர்களாகவும், தொழில்துறை முன்னோடிகளாகவும் இருப்பதனால் அவர்களது சேவைகளைப் பெறுவதில் நேரப் பற்றாக்குறை இருந்தபோதும், இவற்றையும் எதிர்கொண்டு, முடிந்தளவில் பொறுப்புக்களைப் பூர்த்திசெய்த திருப்தி எமது அங்கத்தவர்களுக்கு உண்டு.
இக் காலப்பகுதியில் வருடாந்தக் கூட்டம் உட்பட மொத்தமாக செயற்குழு கூட்டங்கள் ஐந்து நடாத்தப்பட்டுள்ளன. கூட்டங்களுக்கு சராசரியாக 12 அங்கத்தவர்கள் சமூகமளித்துள்ளனர்.
எமது போஷகரின் மறைவு எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துவிட்டபோதிலும், அவர் ஆற்றிய சேவைகளை அன்னாரது பாரியாரும், சைவ மங்கையர் கழக முன்னாள் அதிபருமான திருமதி ஞானேஸ்வரி பாலச்சந்திரன் தொடர்ந்து வழங்க முன்வந்தமை எங்களுக்கு ஆறுதலையையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அவருக்கும் ஒன்றியத்தின் சார்பில் நன்றிகள் உரித்தாகுக.
இக் காலகட்டத்தில் எமது செயற்பாடுகளை நோக்குமிடத்து, சென்ற ஆண்டறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களான புதிய கட்டடம் அமைத்தல், மண்டபத்திற்கு மாபிள் இடும் பணி, கணனிமுறை விரிவாக்கம், 5ஆம் தர புலமைப்பரிசின் நிதியுதவி, அதிபர் இடமாற்றம், நிழற்பிரதிமை இயந்திரம் வழங்கல், மருத்துவ முகாம் நடாத்துதல், சரஸ்வதி சிலைகள் அமைத்தல், சிறிய வளாகத்திற்கு மின்சார வசதி வழங்கல், கணனி மற்றும் உபகரணங்களின் பாதுகாப்புக்காக அறைக்கு இரும்புக் கதவு அமைத்தல் என்பன கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய கட்டடம் அமைத்தல்: ஒன்றியத்தின் முயற்சியின் பலனாக பழைய மாணவரும், வடமாகாண சபைக் கணக்காளருமான திரு. சிவபாதம் அவர்களினது அயராத முயற்சியாலும், மற்றும் பாடசாலை பழைய மாணவ சங்கச் செயலாளர் திரு. செல்வராஜா அவர்களினது உதவியின் பலனாகவும் அரச நிதியினைப் பயன்படுத்தி மூன்று அறைகள் கொண்ட கட்டடம் குறித்த காலப் பகுதிக்குள் பூர்த்தியாகியுள்ளது. இக் கட்டடத்தின் மின்சார இணைப்புக்கு மேலும் சுமார் ரூபா 150,000/= தேவைப்படுகின்றது. இதற்காக ஏற்கெனவே திரு.நி. சிவரூபன் அவர்கள் பங்களிப்புச் செய்துள்ளார். திரு. மு. சிவநேசன் அவர்களும் திரு.வை.ஜெயக்குமார் அவர்களும் பங்களிப்புச் செய்ய இருக்கிறார்கள். திறப்பு விழாவை எதிர்நோக்கியிருக்கும் இக் கட்டடத்திற்கு விரைவில் ஒளியூட்டவேண்டியது எமது கடமையும்கூட. உங்கள் பங்களிப்புடன் இப் பணியை நிறைவு செய்ய முடியும் என்பது திண்ணம்.
2011 ஆண்டு புலமைப் பரிசிலுக்கான நிதி வழங்கல்: 2010 ஆம் ஆண்டு பரீட்சை முடிவுகளின்படி இப் பரீட்சைக்குத் தோற்றிய 56 மாணவர்களில் 13 பேர் சிறப்புச் சித்தி அடைந்துள்ளனர். மேலும் 16 பேர் 100க்கும் மேற்பட்ட புள்ளிகளையும், மேலும் 15 பேர் சித்தி மட்டமான 70க்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெற்றுள்ளனர். ஒன்றியத்தின் சார்பில் சிறப்பு சித்தி பெற்றவர்களுக்கு அன்பளிப்பாக அங்கத்தவர்களிடையே சேர்த்த ரூபா 24,000/= பரிசளிப்பு விழா அன்று வழங்கப்பட்டது. இதனைவிட வழமைபோல புலமைப் பரிசில் நிதியத்திலிருந்தும் பங்களிப்புகள் முதல் மூன்று இடங்களுக்கும் வழங்கப்;பட்டன. இத் தருணத்தில் மாணவர்கள் திறமையாகச் சித்தியடைய முழுமையாகப் பங்களிப்பாற்றிய ஆசிரிய பெருந்தகைகளுக்கு ஒன்றியத்தின் நன்றிகள் உரித்தாகுக.
நிழற்பிரதிமை இயந்திரம் வழங்கல்: புதிய அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கஇ முன்னாள் அதிபரின் பிரிவுபசார விழாவிலன்று ஒன்றியத்தின் சார்பில் பங்குபற்றிய சிரேஷ்ட உப தலைவர் டொக்டர் எம். கே. முருகானந்தன் அவர்களால் வைபவ ரீதியாக இவ்வியந்திரம் புதிய அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இந்த இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்கு டென்மார்க்கில் வதியும் திரு.இரத்தினசபாபதி கிருஷ்ணராசா அவர்கள் முக்கிய பங்களிப்பாக ரூபா 98,651/= வழங்கியுள்ளார். இவ்வியந்திரத்தின் உடனடித் தேவையைக் கருத்தில்கொண்டு ரூபா 35,149/=- முற்பணமாக ஒன்றியத்தினால் வழங்கப்பட்டது.
சரஸ்வதி சிலைகள் திறப்பு விழா: அமரர்கள் செ. பத்மநாதன், இராஜலஷ்;மி பத்மநாதன் ஆகியோரின் நினைவாக அவர்களது குடும்பத்தினரின் நிதி உதவியுடன் பெரிய வளாகத்திலும், அமரர் வை. கா. சிவப்பிரகாசம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரின் மகனான வை.கா.சி.முகுந்தன் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் சிறிய வளாகத்திலும் சரஸ்வதி சிலைகள் அமைக்கப்பட்டன. இச் சரஸ்வதி சிலைகள் திரு, தம்பிராசா, திருமதி மீனலோசனி தம்பிராசா அவர்களாலும், திரு.வை.கா. இராமச்சந்திரன் அவர்களாலும் 19.06.2011 அன்று முறையே திறந்துவைக்கப்பட்டன.
மெல்ல கற்போருக்கான விசேட வகுப்புகள்: ஒன்றியத்தின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக ஓர் ஆசிரியரினால் விசேட வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக வருடாவருடம் ரூபா 40,000/= அன்பளிப்புச் செய்யும் திரு. தி.செல்வமோகன் மற்றும் திரு.சி.வசந்தன் ஆகியோரின் பங்களிப்புகள் மெச்சத்தக்கவை.
மருத்துவ பரிசோதனை முகாம்: டொக்டர் எம்.கே. இரகுநாதன் அவர்களின் தளராத முயற்சியால் 11.12.2011 அன்று முழு நாள் நிகழ்வாக மருத்துவ பரிசோதனை முகாமானது பெரிய வளாகத்தில் நடாத்தப்பட்டது. இதனால் முக்கியமாக பாடசாலை மாணவர்களும் மற்றும் பாடசாலை சமூகத்தினரும் உட்பட சுமார் 450 பேர்வரை பயனடைந்துள்ளனர். மருத்துவ குழாமில் யாழ் அரசினர் வைத்தியசாலையைச் சேர்ந்த குழந்தை மருத்துவம் சார்ந்த சிரேஷ்ட மருத்துவர்களான டொக்டர்கள் இரவீந்திரன், யக்கோப்ஸன் மற்றும் டொக்டர் வசந்தநாதன் தவநாதன் ஆகியோரும், பற்சிகிச்சை நிபுணர் டொக்டர் சி. மகாலிங்கமும்; பங்கேற்றனர். மேற்சிகிச்சைகளுக்கான அறிவுறுத்தல்களும் இங்கு வழங்கப்பட்டன. பாடசாலை வரலாற்றில் முக்கிய பொது நிகழ்வாகக் கருதப்பட்ட இந் நிகழ்வை மேலும் விரிவுபடுத்தி வருடாவருடம் நடத்துவதென டொக்டர் எம்.கே. இரகுநாதன் அவர்கள் உறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது இந் நிகழ்வுக்கு பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
மைதானத்தில் அமைந்துள்ள கலையரங்கிற்கு சிறு திருத்தவேலைகளும், வர்ணம் பூசுதலும்: நடப்பு ஆண்டு விளையாட்டுப் போட்டிக்கு முன்னதாக மேற்கொள்ளவிருந்த வேலைகளுக்கு ரூபா 30,000/=- மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இத் தொகையானது கலையரங்கை அமைத்த அமரர்களாகிய வே.க. கந்தையா மற்றும் சு.பெ.மு. கனகசபாபதி ஆகியோரின் குடும்பத்தினர் சார்பாக எஸ்.கே.கொம்பனி, டொக்டர் எம்.கே. முருகானந்தன் மற்றும் டொக்டர் எம்.கே. இரகுநாதன் ஆகியோரால் வழங்கப்பட்டது.
அதிபருக்கு பிரியாவிடை: கடந்த 5 வருடங்களாக அதிபராகக் கடமையாற்றி எமது பாடசாலையின் வளர்ச்சிக்காக முழுமூச்சுடன் உழைத்தவர் அதிபர் மு. கனகலிங்கம் ஆவார். அண்மைக் காலச் சரித்திரத்தில் எமது பாடசாலை அளப்பரிய வளர்ச்சியை அடைவதற்கான தலைமைத்துவத்தை வழங்கினார். பரீட்சைப் பெறுபேறுகளிலும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை பெருக்குவதிலும் பெருவெற்றி ஈட்டி பாடசாலை சமூகத்தின் அன்புக்குப் பாத்திரமானார்.
20.06.2011 இல் இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர் மு. கனகலிங்கம் அவர்களுக்கு புதிய அதிபரின் தலைமையில் அளித்த பிரியாவிடை வைபவத்தின்போது ஒன்றியத்தின் சார்பில் சிரேஷ்ட உப தலைவர் டொக்டர் எம்,கே. முருகானந்தன் அவர்கள் கலந்துகொண்டார். ஒன்றியத்தின் சார்பாக நினைவுப் பரிசில் ஒன்றை வழங்கியதுடன், அவரின் சேவைகளை நினைவுபடுத்திப் பாராட்டிப் பேசியதுடன், புதிய அதிபரை வரவேற்றும் சிறப்புரை வழங்கினார்.
எமது பாடசாலையில் ஆற்றிய மிக உயர் சேவைக்காக திரு. மு.கனகலிங்கம் அவர்களுக்கு ஆசிரியர் பிரதீப பிரபா 2011 விருது வழங்கப்பட்டது. அவருக்கு ஒன்றியத்தின் மனமுவந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.
புதிய அதிபர் வரவு: புதிய அதிபராகக் கடமையேற்ற திரு.பொ.பொன்னம்பலம் அவர்களும் வற்றாத கடமையுணர்வும் அர்ப்பணிப்பும் கொண்டவராவார். பாடசாலையின் அடிப்படை வசதிகளை வளர்க்கும் அதே நேரம், கல்வி முன்னேற்றத்திலும் அக்கறையோடு செயற்படுகிறார். எமது பழைய மாணவர் ஒன்றியம் மற்றும் பாடசாலை சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று, பாடசாலையை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வழி நடாத்துகிறார். அவருக்கும் எமது மானமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.
பரிசளிப்பு விழா 20.11.2011: ஒன்றியத்தின் சார்பில் பிரதம விருந்தினராக எமது ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரும், யாழ். வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திரு.சு. சற்குணராஜா அவர்கள் கலந்துகொண்டு, விழாவைச் சிறப்பித்தார். அவருடைய பாரியார் திருமதி செல்வரஞ்சிதம் சற்குணராசா பரிசில்களை வழங்கினார்.
பரிசில் வழங்குவதற்கான நூல்களுக்காக அமரர் வே.க. கந்தையா அவர்கள் நினைவாக திருவாளர்கள் க. இராமச்சந்திரன், க. சிறீஸ்கந்தராஜன் ஆகியோர் ரூபா 5,000/= அன்பளிப்புச் செய்திருந்தனர்.
சிறிய வளாகத்திற்கு சுற்று மதில் அமைத்தல்: முன்னாள் தலைமை ஆசிரியை அமரர் பாக்கியம் முருகேசு அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினர் சார்பில் அவரது மகளான திருமதி ஜெயதர்சினி இராஜலிங்கம் அவர்கள் ஏற்கெனவே ரூபா 200,000/= அனுப்பி வைத்துள்ளார்.
 |
| அமரர் பாக்கியம் முருகேசு |
ஆங்கிலம் கற்பித்தலுக்கான ஆசிரியர் பற்றாக்குறை: இவ் விடயத்தை அதிபர் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தார். ஒன்றியம் இவ்விடயத்தில் முக்கிய கவனம் செலுத்தவேண்டியுள்ளது. பாடசாலை வளங்களை அபிவிருத்தி செய்வது மட்டுமல்லாது, மாணவர்களின் கல்வி மட்டத்தை மேம்படுத்தல், ஆசிரியர்களின் நலன்புரி வசதிகள், கற்பித்தலுக்கான உபகரண வசதிகளை மேம்படுத்தல் போன்ற அம்சங்களிலும் மேற்கொண்டு ஒன்றியத்தின் நடவடிக்கைகள் விஸ்தரிக்கவேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது. இவ் விடயத்தில் பழைய மாணவர்களின் கற்பித்தல் துறைசார் அங்கத்தவர்களின் ஆலோசனைகளையும், ஆக்கபூர்வமான உதவிகளையும் ஒன்றியம் வேண்டி நிற்கிறது.
பெண்களுக்கான கழிப்பறை: பாடசாலை பெரிய வளாகத்தில் பெண் மாணவியருக்கான தனியான கழிப்பறை அமைப்பதற்கான திட்டமிடப்பட்டபோது திரு.கந்தையா மனோகரன் உடனடியாக ரூபா ஒரு இலட்சம் வழங்கியுள்ளார். தேவை ஏற்படின் மேலும் உதவி செய்யவும் இணங்கியுள்ளமை குறிப்படத்தக்கது.
ஏனையவை : இது தவிர குறித்த நிதியாண்டில் பாடசாலை அபிவிருத்திக்கென பிரபல சத்திரசிகிச்சை நிபுணர் அமரர் ரீ.என் சண்முகலிங்கம் நினைவாக அவரின் பாரியார் திருமதி பத்மஜோதி சண்முகலிங்கம் அவர்கள் ரூபா 75.000/= நிதியுதவி அளித்துள்ளார். இந் நிதியை ஒரு பொருத்தமான திட்டத்திற்குப் பயன்படுத்த ஒன்றியம் எண்ணியுள்ளது. நிழற்பிரதிமை இயந்திரத்திற்கு முற்பணமாகப் பயன்படுத்தப்பட்ட ரூபா 25,000/= இதில் அடங்கும்.
மேலும் பாடசாலை அபிவிருத்திப் பணிக்கென முன்னாள் ஆசிரியை திருமதி மாணிக்கம் வைத்திலிங்கம் அவர்களும் ரூபா 10,000/= அன்பளிப்புச் செய்துள்ளார். சென்ற வருடங்களிலும் இவர் பாடசாலை வளர்ச்சிக்கு உதவியமை குறிப்பிடத்தக்கது.
சிறிய வாளகத்திற்கு விளையாட்டு மைதானம் ஒன்றின் தேவை உணரப்பட்டமையால், பாடசாலையின் கிழக்குப் பக்கத்தில் மேலும் இட வசதிகள் தொடர்பாக வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருவதுடன், உரிமையாளர்களை இனங்கண்டு, குறைந்தபட்சம் பாவனைக்குப் பெறுவதற்கான வழிவகைகளைப் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நடப்பாண்டிலும் இவ் விடயம் தொடரப்படவேண்டியதாகவுள்ளது.
நடப்பாண்டில் எம்முடன் இணைந்து செயற்பட்ட தலைவர் உட்பட செயற்குழு அங்கத்தவர்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தெரிவுசெய்யப்படவுள்ள புதிய நிர்வாகக் குழுவானது இவ்வம்சங்களையும் கருத்தில் கொண்டு, சிறப்புடன் சேவையாற்ற எமது வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவிப்பதுடன், உங்கள் பரிபூரண ஒத்துழைப்பையும் வழங்கும்படி கோரி. இவ்வறிக்கையை நிறைவுசெய்கிறோம்.
நன்றி.
எம்.கே. இரகுநாதன் க. பிரபாகரன்
தலைவர் எஸ்.கே. சண்முகசுந்தரம்
இணைச் செயலாளர்கள்